தமிழ்நாடு
“சசிகலா வெளியே வந்ததும் அதிமுகவில் இதுதான் நடக்கும்” – சொல்கிறார் ஸ்டாலின்!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர் சசிகலா. அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்றார். அதைத் தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சர் ஆவதற்கு சசிகலா திட்டம் போட்டார். அதற்குள் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்து, சசிகலா குற்றவாளி என அறிவிக்கப்பட்டது.
இதனால் அவரது முதல்வர் கனவு தகர்ந்தது. தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா அடைக்கப்பட்டார். அப்படி சிறைக்குச் சென்றவர் வரும் ஜனவரி 27 ஆம் தேதி விடுதலையாகி வெளியே வருகிறார்.
அவர் வெளியே வந்ததும் அதிமுகவில் ஒரு பூகம்பமே வெடிக்கும் என்று பலரும் ஆருடம் சொல்லி வருகிறார்கள். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரான மு.க.ஸ்டாலினும் கருத்து கூறியுள்ளார்.
அவர் திமுக சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட ‘மக்கள் கிராம சபைக் கூட்டத்தில்’ உரையாற்றிய போது, ‘சசிகலா, 27ந் தேதி வெளிய வருது. அன்னைக்கே அவங்க சென்னைக்கு வருவாங்கன்னு சொல்றாங்க. அவங்க வந்த உடனே இந்த ஆட்சி இருக்குமான்னு தெரியாது. அவங்க வெளிய வந்து 4 நாள் கூட பொறுத்திருக்க வேண்டாம். அன்னைக்கே இந்த ஆட்சி இருக்குமான்றது சந்தேகந்தான். அப்படியான நிலைமையில தான் இந்த ஆட்சி நடந்திட்டு இருக்கு.
நமக்கான இலக்கு ரொம்ப தெளிவா இருக்கு. கூடிய விரைவில தேர்தல் வரப் போகுது. அந்த தேர்தல்ல திமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்கணும்னு மக்கள் விரும்புறாங்க. அந்த வெற்றிக்கு நாம எல்லாரும் அயராது பாடுபடுவோம்’ என்று பேசி முடித்தார்.
முன்னதாக சசிகலா விடுதலையாகி வந்தால் அதிமுகவில் தாக்கம் ஏற்படுமா என்பது குறித்துப் பேசிய தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, ‘சசிகலா, மீண்டும் அதிமுகவில் இணைய 100 சதவீதம் வாய்ப்பு என்பதே கிடையாது. அவர் கட்சியிலேயே இல்லை. அதைப் போல தினகரனும் அதிமுகவில் இல்லை. அதிமுக என்பது பெரிய இயக்கம். இதில் பலர் வரலாம், போகலாம். ஆனால், கட்சி இருக்கும்.
தினகரனை, ஜெயலலிதா ஒதுக்கியே வைத்திருந்தார். அவர் உயிருடன் இருக்கும் வரை தினகரனை அதிமுகவில் சேர்க்கவே இல்லை’ எனக் கூறினார்.
அதே நேரத்தில் அதிமுகவின் ஒரு தரப்பினர், சசிகலாவுக்கு ஆதரவாக தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனால் அதிமுகவில் தற்போது உட்கட்சிப் பூசல் நடந்து கொண்டிருக்கிறது.