தமிழ்நாடு

கோடைகாலத்தில் இனி இந்தப் பிரச்சனையே இருக்காது: குட் நியூஸ் சொன்ன தமிழக மின்துறை அமைச்சர்!

Published

on

பொதுவாக கோடைகாலத்தில் நாம் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகள் என்றால் வெயிலும், மின்வெட்டும் தான். வெயில் தகித்துக் கொண்டிருக்கும் போது, மின்வெட்டு ஏற்பட்டால் வியர்வையில் நனைந்து விடுவோம். ஆனால், இந்த ஆண்டு இந்தப் பிரச்சனையே இருக்காது என தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நற்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கோடைகால மின்தேவை

கோடை காலத்தில் மின்தேவை அதிகரித்தாலும், அதனை சமாளிக்க தமிழக மின்வாரியம் தயார் நிலையில் உள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை தலைமைச் செயலகத்தில் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், கடந்த வருடம் மார்ச் 2022 இல் 17,196 மெகாவாட் அளவாக இருந்த மின்தேவை, நடப்பாண்டு 2023 மார்ச் மாதத்தில் 18,053 மெகாவாட் ஆக உயர்ந்துள்ளது. அடுத்து வரும் ஏப்ரல் மாதத்தில் மின்தேவை 18,500 மெகாவாட் அளவாக உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது என அமைச்சர் கூறினார்.

ஸ்மாட் மீட்டர்

தமிழ்நாட்டில் இன்னமும் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்துவதற்கான ஒப்பந்தப் புள்ளி விரைவில் கோரப்படும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் இலவசமாக வழங்கப்படும். நவீன தொழில்நுட்பத்தில் ஸ்மார்ட் மீட்டர்கள் உருவாக்கப்படுவதன் காரணத்தால், மின் இழப்புக்கு வாய்ப்பே இல்லை என்றார்.

மின்சார சார்ஜிங் நிலையங்கள்

தமிழக மின்வாரியத்திற்கு சொந்தமான 100 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதற்கான பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வருகின்ற ஏப்ரல் மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டார்.

seithichurul

Trending

Exit mobile version