தமிழ்நாடு
‘அதிமுகவை இப்படித்தாங்க மீட்பேன்!’- பிளானை விளக்குகிறார் டிடிவி தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்னும் புதிய கட்சியை ஆரம்பித்து, சட்டமன்றத் தேர்தலை முதன் முறையாக சந்திக்க இருக்கிறார் டிடிவி தினகரன். அதே நேரத்தில், ‘அதிமுகவை மீட்பதற்காக தொடங்கப்பட்ட கட்சி தான் அமமுக’ என்று தொடர்ந்து சொல்லி வருகிறார்.
ஒரு புதிய கட்சியை ஆரம்பித்து விட்டு, இன்னொரு கட்சியை எப்படி மீட்பது என்கிற கேள்விகள் எழுந்தன. இதற்கு அவரே விளக்கம் கொடுத்துள்ளார்.
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமையகத்தில் ஊடகத்தினரை சந்தித்த தினகரன், ‘அதிமுக என்பது ஜெயலலிதாவின் கட்சி. எம்.ஜி.ஆருடைய கட்சியாகும். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆரம்பித்ததே அதிமுகவை மீட்டெடுப்பதற்குத் தான். எப்படி இன்னொரு கட்சியை ஆரம்பித்துவிட்டு, அதிமுகவை மீட்டெடுப்பீர்கள் என நீங்கள் கேட்கலாம். தேர்தல் முடிந்தவுடன் ஜனநாயக முறையில் அதிமுகவை மீட்டெடுப்பதற்கு பணிகள் செய்யப்படும்.
ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் அமமுகவில் தான் இருக்கிறார்கள். எனவே மக்களின் ஆதரவும், தொண்டர்களின் ஆதரவும் எங்களுக்குத் தான் இருக்கிறது. இதை வைத்துத் தான் அதிமுகவை மீட்டெடுப்போம்’ என்று கூறியுள்ளார்.