இந்தியா
அறிமுகமானது டிஜிட்டல் கரன்சி.. இந்த 8 விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
இந்தியாவில் டிசம்பர் 1 முதல் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்த நிலையில் நேற்று சில குறிப்பிட்ட நகரங்களில் உள்ள குறிப்பிட்ட வங்கிகளில் மட்டும் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியர்களுக்கு டிஜிட்டல் கரன்சி பயன்படுத்துவது என்பது புதிதான அம்சமாக இருந்தாலும் நாளடைவில் இந்தியர்கள் டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்த பழகிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள மும்பை, புது தில்லி, பெங்களூரு மற்றும் புவனேஸ்வர் ஆகிய நான்கு நகரங்களில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, யெஸ் பேங்க் மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் ஆகிய நான்கு வங்கிகளுடன் டிஜிட்டல் கரன்ஸியை வாங்கி கொள்ளலாம் என ரிசர்வ் அறிவித்தது.
மும்பை, புது தில்லி, பெங்களூரு மற்றும் புவனேஸ்வர் போன்ற நான்கு நகரங்களில் பரிசோதனை முயற்சியாக டிஜிட்டல் கரன்சி தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து அகமதாபாத், காங்டாக், குவஹாத்தி, ஹைதராபாத், இந்தூர், கொச்சி, லக்னோ, பாட்னா மற்றும் சிம்லா ஆகிய நகரங்களில் விரைவில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இந்த நிலையில் டிஜிட்டல் கரன்சி குறித்த 8 முக்கிய விஷயங்களை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அவை பின்வருவன:
1. டிஜிட்டல் கரன்சி செயல்பாட்டின் முழு விவரங்கள் தற்போது தெளிவாக தெரியவில்லை என்றாலும், டிஜிட்டல் டோக்கன் வடிவத்தில் e-ரூபாய் கிடைக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2. டிஜிட்டல் கரன்சியை தனி நபர்களுக்கும், வணிகர்களுக்கும் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தலாம். வணிகர்களின் QR குறியீடுகளுக்கும் டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்தி கொள்ளலாம்
3. டிஜிட்டல் கரன்சி என்பது நம்பிக்கை, பாதுகாப்பு அம்சங்களை வழங்கும் என்றும் அதன் மதிப்பு எந்த காரணத்தை முன்னிட்டும் குறையாது என்றும், கிரிப்டோகரன்சி போன்று மதிப்பு மாறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
4. சில்லறை டிஜிட்டல் கரன்சியின் முதல் கட்டம், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, யெஸ் வங்கி மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் ஆகிய நான்கு வங்கிகளுடன் நாடு முழுவதும் நான்கு நகரங்களில் தொடங்கியுள்ளது.
5. டிஜிட்டல் கரன்சி என்பது டிஜிட்டல் டோக்கன் வடிவில் தற்போது உள்ள காகித நாணயங்கள் மற்றும் நாணயங்கள் வடிவில் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
6. டிஜிட்டல் கரன்சி வங்கிகள் மூலம் விநியோகிக்கப்படும். வங்கிகள் வழங்கும் டிஜிட்டல் பணத்தை மொபைல் போன்கள் உள்ளிட்ட சாதனங்களிலும், டிஜிட்டல் வாலட் மூலமும் சேமித்து பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்
7. டிஜிட்டல் கரன்சிக்கு எந்தவித வட்டியும் வங்கி வழங்காது.
8. டிஜிட்டல் கரன்சியை உருவாக்குதல், விநியோகம் செய்தல், சில்லறை விற்பனை ஆகியவற்றின் முழு செயல்முறையின் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி கண்காணிக்கும்.