தமிழ்நாடு
திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அதிரடி!
திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தமிழகத்தில் காலியாக இடைத்தேர்தல் நடத்தப்படவேண்டிய நிலையில் 20 தொகுதிகள் உள்ள நிலையில் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இது அரசியல் வட்டாரத்தில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தினாலும் பிரதான கட்சிகள் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த தொடங்கினர். அமமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பெயரை கூட அறிவித்துவிட்டன.
இந்நிலையில் இந்த தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. கஜா புயல் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால் திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தன. மேலும் இது தொடர்பாக சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர இருந்த நிலையில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.