இந்தியா
திருவாரூரில் திமுக சார்பில் உதயநிதி போட்டியா? ரசிகர்கள் விருப்பமனு தாக்கல்!
சென்னை: திருவாரூர் இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட அவரது ரசிகர்கள் சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட போகும் திமுக வேட்பாளர் யார் என்பது குறித்து திமுகவில் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. தற்போது போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தங்கள் விருப்ப மனுக்களை அளித்து வருகிறார்கள்.
கடந்த திங்கள் கிழமையில் இருந்து விருப்ப மனு தாக்கலை திமுக பெற்று வருகிறது. இந்த மனுக்கள் மீது இந்த ஆலோசனை நடத்தப்படும். அதன்பின் நாளை நேர்முக தேர்வு நடத்தப்படும். நாளையே வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படும்.
இன்று காலையிலேயே இதற்காக சிலர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் சார்பாக 20க்கும் அதிகமானோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் சார்பாக 40 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர்.அவர் பெயரில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக திருவாரூர் இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட அவரது ரசிகர்கள் சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவரது ரசிகர்கள் சிலர் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்தனர். இவரது விருப்ப மனுவும் பரிசீலனையில் உள்ளது.