தமிழ்நாடு
‘என் தம்பி திருமா என்கிட்ட தான் வரணும்!’- அரங்கம் அதிர பேசிய கமல்
![thirumavalavan - Kamal - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/03/thirumavalavan-Kamal.jpg)
தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் பம்பரமாக சுழன்று தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. களத்தில் பிரதானக் கட்சியாக நிற்கும் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யமும் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது.
மடிப்பாக்கத்தில் மய்யம் சார்பில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தில் பேசிய கமல், ‘என் தம்பி திருமாவளவன் இங்கு தான் வந்தாக வேண்டும்’ என்று கூட்டம் அதிர பேசியுள்ளார்.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தொல்.திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எதிர் வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட 6 இடங்களை ஒதுக்கப்பட்டுள்ளது. இது விசிகவின் பலத்துக்கு ஏற்ற ஒதுக்கீடு இல்லை என்று பல தரப்பினரும் கருதுகின்றனர். விசிக தரப்பில் அதிருப்தி இருந்தாலும் அதிமுக – பாஜக கூட்டணியை எதிர்க்க இதுதான் சரியான முடிவு என்று சமரசத்துக்கு வந்துள்ளது.
இந்நிலையில் மடிப்பாக்கம் பொதுக் கூட்டதிதல் பேசிய கமல், ‘சமூகநீதி என்பது ஒரு வித ஈகை அல்ல. அது எங்களின் உரிமையாகும். அது புரியாதவர்களுக்குப் புரிய வைக்கும் முயற்சிதான் இந்த நவீன அரசியல். அதைத் தான் நாங்கள் செய்ய வந்திருக்கிறோம்.
இவ்வளவு சமூகநீதி பேசும் நீங்கள் முன்னதாக 21 இடங்கள் கொடுத்தீர்கள். பிறகு 10 இடங்களை ஒதுக்கினீர்கள். தற்போது வெறும் 6 இடங்களை மட்டும் கொடுத்துள்ளீர்கள். இதன் பிறகு என் தம்பி திருமாவளவனை எங்கு கொண்டு போய் வைப்பீர்கள். என் தம்பி இங்கு தான் வர வேண்டியிருக்கும்’ என்று அனல் பறக்கப் பேசியுள்ளார்.