உலகம்
பரவும் டெல்டா கொரோனா: 3வது டோஸ் தடுப்பூசி அவசியமா?
உலக அளவில் கொரோனா தொற்றின் டெல்டா வகை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. டெல்டா வகை கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக உலகின் பல நாடுகளில் மீண்டும் நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகள் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்நிலையில் பிஃபைசர் நிறுவனம், மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக தகவல் வந்துள்ளது.
அப்படிச் செலுத்துவதன் மூலம் கொரோனா தொற்றுக்கு எதிராக உடலின் செயல் திறனை அதிகரிக்க முடியும் என்று கருதப்படுகிறது.
டெல்டா வகை கொரோனா தொற்று முதன் முதலில் இந்தியாவில் தான் அதிகமாக பரவத் தொடங்கியது. இந்தியாவில் இரண்டாவது கொரோனா அலையின் போது பலர் பாதிக்கப்பட்டது இந்த வகை கொரோனா தொற்றினால் தான். தற்போது இந்தியாவில் இந்த கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில், பல நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது.
சமீபத்தில் டெல்டா கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவுள்ள டோக்கியோ நகரில் சுகாதார அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டது.