தமிழ்நாடு
எஸ்பிஐ ஏடிஎம் 3வது கொள்ளையன் நீதிமன்றத்தில் ஆஜர்: 15 நாள் காவல்!
சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் உள்ள டெபாசிட் இயந்திரங்களில் நூதனமான முறையில் கொள்ளை அடிக்கப்பட்டது. இதில் சுமார் 50 லட்சத்திற்கும் மேல் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் இதனை அடுத்து தனிப்படை போலீசார் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் கொள்ளை அடித்தவர்கள் வட நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் குறிப்பாக ஹரியானாவில் சேர்ந்தவர்கள் என்பதால் தனிப்படை போலீசார் ஹரியானா மற்றும் டெல்லி பகுதிகளில் தேடிவந்தனர். இந்த நிலையில் எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட அமீர் மற்றும் வீரேந்தர் ஆகிய இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்கள் என்பதும் அவர்கள் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அமீர் எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் கொள்ளையடித்தது எப்படி என்று நடித்து காட்டியதாகவும் அதனை போலீசார் வீடியோ எடுத்ததாகவும் கூறப்பட்டது
இந்த நிலையில் நேற்று இந்த கொள்ளையில் தொடர்பு கொள்ள மூன்றாவது கொள்ளையனை ஹரியானாவில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். நஜீம் உசைன் என்ற அந்த கொள்ளையன் இன்று சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டார். இதனை அடுத்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு பின் நீதிபதி முன் ஆஜர் செய்யப்பட்டதாகவும், நஜீம் உசைனை ஜூலை 13 வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.