தமிழ்நாடு
விழுப்புரம் மூதாட்டிக்கு 3வது டோஸ் தடுப்பூசி: பெரும் பரபரப்பு!
ஏற்கனவே இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட மூதாட்டி ஒருவருக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி போட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு ஏராளமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திண்டிவனம் அடுத்த விட்டலாபுரம் என்ற பகுதியை சேர்ந்த விவசாயி தனது தாயுடன் தடுப்பூசி முகாமிற்கு வந்திருந்தார்.
அவர் அங்கு பொது மருத்துவ முகாம் என்று நினைத்து தனது தாயாரின் உடல்நிலை பாதிப்பிற்கு ஊசி போட வந்ததாக தெரிகிறது. ஆனால் மூதாட்டியிடம் என்ன ஏது என்று விவரம் கேட்காமல் அங்குள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் அவருக்கு தடுப்பூசி போட்டு உள்ளனர்.
மூதாட்டி ஏற்கனவே தடுப்பூசி போட்டாரா? என்று கேட்காமல் அவருக்கு தடுப்பூசி செலுத்திய பின்னர் தான் மூன்றாவது முறையாக அவருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவரிடம் ஆலோசனை செய்யும்படி அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
மருத்துவர்கள் ஆலோசனை செய்த போது அவர் தன்னுடைய பர்சனல் மொபைல் எண்ணை கொடுத்து மூதாட்டிக்கு ஏதும் பிரச்சினை என்றால் தனக்கு போன் செய்யவும் என்றும் உடனடியாக தான் வந்து சிகிச்சை செய்வதாகவும் தெரிவித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பெண்ணடம் என்ற பகுதியில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திய பெண் ஒருவருக்கு மீண்டும் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திய சம்பவம் நடந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மூதாட்டி ஒருவருக்கு மூன்றாவது தவணையாக தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.