சினிமா
சரியான திட்டமிடல் இல்லை’: ‘தர்பார்’ தோல்வி குறித்து முருகதாஸ்!
‘தர்பார்’ படத்தோல்வி குறித்து இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் முதல் முறையாக மனம் திறந்துள்ளார்.
தமிழில் ‘கஜினி’, ‘துப்பாக்கி’, ‘ரமணா’ உள்ளிட்டப் பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ். இவர் ரஜினியை வைத்து இயக்கிய ‘தர்பார்’ படம் அப்பொழுது பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. ஆனால், அந்தப் படம் எதிர்பாராத விதமாக தோல்வி அடைந்தது. இப்பொழுது, அந்தப் படத்தின் தோல்வி குறித்து, தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் ஏ ஆர் முருகதாஸ் மனம் திறந்து பேசி உள்ளார்.
அவர் தெரிவித்திருப்பதாவது, ”தர்பார்’ படம் எனக்கு பிப்ரவரி மாதம் இயக்க வாய்ப்பு கிடைத்தது. மும்பையில் ஜூனில் மழைக்காலம். நாங்கள் ஆகஸ்ட் மாதத்திற்குள் படத்தை முடிக்க வேண்டும். ஏனெனில், அதற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்குள் செல்ல திட்டமிட்டு இருப்பதாக சொன்னார்கள். மேலும், ‘தர்பார்’ படமும் அதுதான் அவருடைய கடைசி படம் எனவும் சொல்லப்பட்டது. நான் ரஜினி சாரின் மிகப்பெரிய ரசிகன் எனும் போது எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை நழுவ விட விரும்பவில்லை.
பிப்ரவரியில் வாய்ப்பு கிடைத்து மார்ச் மாதம் படப்பிடிப்புக்கு போய் ஜூன் மாதத்திற்குள் அனைத்து படப்பிடிப்பையும் முடிக்க வேண்டும் என்ற சூழல் இருந்தது. அதனால் கதையை சரியாக திட்டமிடாமல் அவசரமாக எடுத்தோம். அப்பொழுது ரஜினி சாரை வைத்து எப்படியாவது ஒரு ஹிட் படம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. படத்திற்கு சரியான நேரம் கிடைக்காததாலும் சரியான திட்டமிடல் இல்லாததாலும் அந்த படம் தோல்வியில் முடிந்தது” என ஏ ஆர் முருகதாஸ் மனம் திறந்து உள்ளார்.