தமிழ்நாடு
கமல்ஹாசனின் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை: சத்யபிரதா சாகு
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை என்று தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அவர்கள் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் அருகே மர்ம வாகனங்கள் இருப்பதாகவும் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முயற்சிகள் நடைபெறுவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். இதுகுறித்து புகார் மனுவாக தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் கமல்ஹாசன் தரப்பில் இருந்து வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அவர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை என்றும் வாக்கு எண்ணும் மையங்களில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் திட்டமிட்டபடி மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அன்று மாலையே கிட்டத்தட்ட முடிவுகள் அனைத்தும் வெளி வந்துவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.