இந்தியா
தெலுங்கான உள்ளாட்சி தேர்தலிலும் பாஜக படுதோல்வி!
![Modi 1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/06/Modi-1.jpg)
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனித்து 303 இடங்களையும் பாஜக கூட்டணி 350 இடங்களயும் கைப்பற்றி வலுவான இரண்டாவது ஆட்சியை தொடங்கியுள்ளது. அதில் தெலுங்கான மற்றும் கர்நாடகாவில் சிறப்பான வெற்றியை பெற்று தென்னிந்தியாவில் வலுவாக காலூன்றி வருகிறது.
இந்நிலையில் கர்நாடாகாவில் கடந்த மே 29-ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் காங்கிரஸ் மற்றும் மஜத பெருவாரியான இடங்களை கைப்பற்றி அசத்தியுள்ளது. இது அரசியல் நோக்கர்கள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 1221 வார்டுகளில் காங்கிரஸ் கட்சி 506 இடங்களில் வெற்றிபெற்றது. காங்கிரஸின் கூட்டணி கட்சியான மதசார்பற்ற ஜனதாதளம் 174 வார்டுகளில் வெற்றிபெற்றது. ஆக காங்கிரஸ் கூட்டணி மொத்தமாக 683 வார்டுகளில் வெற்றிபெற்றது. ஆனால் பாஜக 366 வார்டுகளில் மட்டுமே வென்றது.
இந்நிலையில் தெலங்கானா மாநில உள்ளாட்சித் தேர்தலிலும் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. தெலங்கானா உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் உள்ள 32 மாவட்ட ஊராட்சிகளையும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியே வென்றுள்ளது. மாவட்ட ஊராட்சிகளில் மொத்தமுள்ள 538 இடங்களில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி 445 இடங்களையும், காங்கிரஸ் 75 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் பாஜக வெறும் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். சுயேச்சைகள் 5 இடங்களில் வெற்றிபெற்றனர்.
ஊராட்சி ஒன்றிய வார்டுகளுக்கான தேர்தலில் மொத்தமுள்ள 5816 இடங்களில் 3557 இடங்களை தெலுங்கானா ராஷ்டிர சமிதியும், 1377 இடங்களை காங்கிரசும், பிற கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் 636 இடங்களையும் வென்றுள்ளனர். ஆனால் பாஜக வெறும் 211 இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளது. ஆனால் மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்ற பாஜகவால் இந்த தேர்தலில் ஏன் வெற்றிபெற முடியவில்லை என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது.