சினிமா செய்திகள்
சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தியேட்டர் உரிமையாளர்கள்?
நடிகர் சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் நடிகர் சந்தீப் கிஷன், கெளதம் வாசுதேவ் மேனன், விஜய்சேதுபதி உள்ளிட்டப் பலர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பான் இந்தியா படமாக கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியானது ‘மைக்கேல்’.
விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் படம் ஓரளவு நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் கடந்த மாதம் 24ம் தேதி ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. பொதுவாக, படம் வெளியாகி நான்கு வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் படம் வெளியிட வேண்டும் என்பது திரையரங்க உரிமையாளர்களுக்கும் ஓடிடிக்கும் இடையில் இருக்கும் சமீபத்திய ஒப்பந்தம்.
இதன்படியே, படங்கள் வெளியாகி குறைந்தபட்சம் ஒரு மாதம் கழித்தே ஓடிடியில் வெளியாகி வருகிறது. இந்த ஒப்பந்தத்தை மீறி படம் வெளியாகி மூன்று வாரங்களிலேயே அதாவது பிப்ரவரி 24ம் தேதியே ‘மைக்கேல்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகி இருப்பதே இப்போது திரையரங்க உரிமையாளர்களின் எதிர்ப்புக்கு காரணம்.
இதனால், தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ’மைக்கேல்’ படம் திரைப்படம் திரையரங்குகளில் தமிழகத்தில் ஓடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், இதுகுறித்து படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.