இந்தியா
நாடு முழுவதற்கும் ஆபத்து: கொரோனா குறித்து எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு
கொரோனா வைரஸால் நாடு முழுவதும் பெரும் ஆபத்து காத்திருக்கிறது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் தினமும் 50 ஆயிரம், 60 ஆயிரம் என கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் கொரோனா இரண்டாவது அலை மிக மோசமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஆபத்து இருப்பதாகவும் இதனை அடுத்து மாநில அரசுகள் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நேற்று செய்தியாளர்களிடம் நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் அவர்கள் பேசியபோது கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. சில மாநிலங்களில் இருந்து வரும் வந்துகொண்டிருக்கும் கொரோனா எண்ணிக்கை குறித்த தகவல் பெரும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது என்று கூறினார்.
மேலும் தமிழகம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனாவின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது என்றும் இதனை அடுத்து மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்து கொண்டார்.
நாடு முழுவதும் கொரோனாவால் பேராபத்து இருப்பதால் உடனடியாக மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கையை தொடங்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.