தமிழ்நாடு
அதிமுக பிரச்சாரத்தில் சிறுமியிடம் அத்துமீறல்: பளார் விட்ட தாய்!
தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு நடந்த அதிமுக வேட்பாளரின் அறிமுக பிரச்சார கூட்டத்தின் போது ஒரு நபர் கூட்டத்தில் இருந்த ஒரு சிறுமியிடம் அத்துமீறி நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த அந்த சிறுமியின் தாய் அந்த நபரை தாக்கியுள்ளார்.
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதில் நிலவிவந்த குழப்பம் ஒரு வழியாக முடிவுக்கு வந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரச்சாரம் தற்போது தான் சூடுபிடித்துள்ளது. அனல் பறக்கும் பிரச்சாத்தின் மத்தியில் தொகுதிக்கு உட்பட்ட வேப்பம்பாளையத்தில் அதிமுக வேட்பாளர் அறிமுக பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல முக்கிய அதிமுக தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தின் போது அங்கு வந்திருந்த சிறுமி ஒருவரிடம் ஒரு நபர் அத்துமீறி நடந்துள்ளார். இதனை பார்த்து ஆவேசமடைந்த சிறுமியின் தாய் அந்த நபருக்கு பளார் விட்டு தாக்கமுயன்றார். மேலும் அந்த நபரை கடுமையான வார்த்தைகளால் திட்டினார். இதனால் அங்கு பரபரப்பு தொற்றிக்கொண்டது. இதனையடுத்து அங்கிருந்த அதிமுகவினர் அவரை சமாதானப்படுத்தினார். பின்னர் அந்த சிறுமியை அழைத்துக்கொண்டு கூட்டத்தை விட்டு வெளியேறினார் அந்த தாய். அதிமுக வேட்பாளர் அறிமுக பிரச்சார கூட்டத்தில், சிறுமியிடம் ஒருவர் அத்துமீறிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.