இந்தியா
“மோடி, நமக்கிருக்க தீர்வு அது ஒண்ணுதான்”- கொரோனாவிலிருந்து மீள ராகுலின் யோசனை
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று உச்சத்தைத் தொட்டு வருகிறது. கொரோனாவின் இரண்டாவது அலை நாட்டில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 3.57 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டியுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அதிர்ச்சியளிக்கும் வகையில் 3,449 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்து உள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் மொத்தமாக 20,952 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 122 பேர் உயிரிழந்துள்ளனர். இந்திய அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உருவெடுத்து உள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி ராகுல் காந்தி, கொரோனா தொற்றை எதிர்கொள்ள மத்திய அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அவர் ட்விட்டர் பக்கத்தில், ‘ஒன்றிய அரசுக்கு ஒன்று புரியவில்லை. தற்போதைய நிலையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்து ஒரே வழி முழு லாக்டவுன் மட்டும் தான். மேலும் மிகவும் மலிவடைந்தவர்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும்.
தற்போதைய நிலையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நம்மிடம் எந்த திட்டமும் இல்லை. இந்தியாவுக்கு எதிராக மாபெரும் குற்றம் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.