தமிழ்நாடு

தமிழக அரசின் ’தகைசால் தமிழர்’ விருதை முதலாவதாக பெறுபவர் இவர்தான்!

Published

on

“தகைசால்‌ தமிழர்‌” விருதிற்கு முதுபெரும்‌ தலைவர்‌ திரு. என்‌. சங்கரய்யா அவர்கள்‌ தேர்வு – சுதந்திர தின விழாக்‌ கொண்டாட்டத்தின்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்களால்‌ வழங்கப்படும்‌

தமிழ்நாட்டிற்கும்‌, தமிழினத்தின்‌ வளர்ச்சிக்கும்‌ மாபெரும்‌ பங்காற்றியவர்களைப்‌ பெருமைப்படுத்தும்‌ வகையில்‌, “தகைசால்‌ தமிழர்‌” என்ற பெயரில்‌ புதிய விருதை உருவாக்கவும்‌, இந்த விருதிற்கான விருதாளரைத்‌ தேர்வு செய்திட ஒரு குழுவை அமைத்திடவும்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ ஏற்கனவே ஆணையிட்டிருந்தார்கள்‌.

இவ்விருதுக்கான விருதாளரைத்‌ தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின்‌ கலந்தாலோசனைக்‌ கூட்டம்‌ சென்னை, தலைமைச்‌ செயலகத்தில்‌, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது.

அக்கூட்டத்தில்‌, இளம்‌ வயதிலேயே பொது வாழ்க்கையில்‌ ஈடுபட்டு, மாணவத்‌ தலைவராகவும்‌, சுதந்திரப்‌ போராளியாகவும்‌, சட்டமன்ற உறுப்பினராகவும்‌ அரும்பணியாற்றியதுடன்‌, தமிழ்நாட்டிற்கும்‌, தமிழினத்தின்‌ வளர்ச்சிக்கும்‌ பெரும்‌ பங்காற்றி, சமீபத்தில்‌ 100 வயதை அடைந்த தமிழர்‌, மார்க்சிஸ்ட்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சியின்‌ மூத்த தலைவர்‌ திரு. என்‌. சங்கரய்யா அவர்களைப்‌ பெருமைப்படுத்தும்‌ வகையில்‌, இவ்வாண்டிற்கான “தகைசால்‌ தமிழர்‌” விருதுக்கு அவரது பெயர்‌ பரிசீலிக்கப்பட்டு, அவருக்கு இவ்விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டது.

“தகைசால்‌ தமிழர்‌” விருதிற்குத்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. என்‌.சங்கரய்யா அவர்களுக்கு, பத்து இலட்சம்‌ ரூபாய்க்கான காசோலையும்‌, பாராட்டுச்‌ சான்றிதழும்‌, வருகிற ஆகஸ்ட்‌ திங்கள்‌ 15 ஆம்‌ நாள்‌ நடைபெறும்‌ சுதந்திர தின விழாவில்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்களால்‌ வழங்கப்படும்‌.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

seithichurul

Trending

Exit mobile version