தமிழ்நாடு
பிரபாகரனுக்கும் மஹிந்தாவுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்: கவிஞர் வைரமுத்து
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும் முன்னாள் இலங்கை பிரதமர் மஹிந்தா ராஜபக்சேவுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் என கவிஞர் வைரமுத்து கவிதை வடிவில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழீழ விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடினார் என்பதும் அவரது முயற்சி தோல்வி அடைந்தாலும் கடைசிவரை அவர் தனது தாய் மண்ணை விட்டு தப்பிச் செல்லாமல் தனது இன்னுயிரை தாய் மண்ணுக்காக தியாகம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
ஆனால் தங்களுக்கு எதிராக ஒரு போராட்டம் நடந்தவுடன் உயிரை பாதுகாக்க பயந்துகொண்டு மஹிந்தா ராஜபக்சவும் அவரது குடும்பத்தினரும் நாட்டைவிட்டே செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்
இந்த நிலையில் பிரபாகரனுக்கும், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் இதுதான் என்று குறிப்பிட்டு கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதை பின்வருமாறு:
நான்கு பக்கம்
மரணம் சூழ்ந்தபோதும்
‘தாயகம் பிரியேன்
தாய்மண்ணில் மரிப்பேன்’ என்ற
பிரபாகரத் தமிழனின்
பேராண்மை எங்கே…
ஊர் கொந்தளித்த
ஒரே மாதத்தில்
நாடு கடக்கத் துடிக்கும்
ராஜபக்ச எங்கே…
ஓ
சர்வதேச சமூகமே!
இப்போதேனும்
தமிழன் வீரத்திற்குத்
தலைவணங்கு