தமிழ்நாடு
கிரிப்டோகரன்ஸியில் தங்கமணி முதலீடா? லஞ்ச ஒழிப்புத்துறையினர் பரபரப்பு தகவல்!
முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 14 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் போலீசார் சோதனை செய்து வருவதாக வெளியான தகவலை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்துக்களை கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தங்கமணி அவரது மனைவி சாந்தி மற்றும் மகன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஏராளமான சொத்துக்களை சட்டவிரோதமாக தங்கமணி சேர்த்ததாகவும் அவ்வாறு சேர்த்த சொத்துக்களை கிரிப்டோகரன்சி முதலீடு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏராளமான சொத்துக்களை கிரிப்டோகரன்சியில் தங்கமணி முதலீடு செய்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் தகவல் கசிந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வரும் நிலையில் அந்த பகுதியில் தங்கமணியின் ஆதரவாளர்கள் குவிந்துள்ளதால் காவல்துறையினர் பாதுகாப்புக்காக போடப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் மட்டும் 14 இடங்களிலும் வேலூர், சேலம், திருப்பூர், ஆகிய பகுதிகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் மட்டுமின்றி கர்நாடக மாநிலத்திலும் இரண்டு இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை ஆறு முப்பது மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் இரவு வரை இந்த சோதனை நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு உள்ளாகும் ஐந்தாவது அமைச்சர் முன்னாள் அமைச்சர் தங்கமணி என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, சி விஜயபாஸ்கர், எம்ஆர் விஜயபாஸ்கர், கேசி வீரமணி ஆகியோர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.