இந்தியா
கொரோனா உறுதியானதால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்த தாசில்தார்: அதிர்ச்சி தகவல்
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் தினமும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வரும் நிலையில் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அச்சத்தின் காரணமாக தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட தாசில்தார் ஒருவரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தாசில்தார் ஒருவருக்கு கொரோனா தொற்று சமீபத்தில் உறுதியானது. தனக்கு கொரோனா தொற்று உறுதியானதில் இருந்து அவர் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் திடீரென தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது மட்டுமின்றி கர்நாடக மாநிலத்தையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் பயப்பட வேண்டாம் என்று தைரியம் அளிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தற்போது வலியுறுத்தி வருகின்றனர். கொரோனா பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் என்றாலும் கோடிக்கணக்கானோர் குணமடைந்து உள்ளனர் என்பதையும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.