தமிழ்நாடு
தமிழகத்தில் தீவிரவாத தாக்குதலுக்கு வாய்ப்பு: 19 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்!
இலங்கையில் சமீபத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் ஏற்படுத்திய பதற்றம் தனிவதற்குள் தமிழகத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இது தொடர்பாக பெங்களூரு காவல்துறை தமிழக காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஓசூரிலிருந்து நேற்று மாலை 5.35 மணிக்கு ஒருவர் தொலைபேசியில் அழைத்து , ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில், முக்கியமான பகுதிகளில் குண்டு வெடிக்கும். ராமநாதபுரத்தில் 19 தீவிரவாதிகள் பதுங்கியிருக்கிறார்கள். ரயில்களில் குண்டு வெடிக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் கூறிவிட்டு போனை வைத்துவிட்டார்.
தமிழில் பேசிய அந்த நபர், லாரி ஓட்டுநர் என்றும் அவரது பெயர் சாமி சுந்தர் மூர்த்தி எனவும் அவர் 6361093152 என்ற எண்ணிலிருந்து தொடர்புகொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து பெங்களூரு காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகக் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம்,விமான நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் வெள்ளிக்கிழமை முதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளும், சோதனை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.