தமிழ்நாடு
ஏப்ரல் 7ஆம் தேதி வரை வெப்பநிலை உயரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
![Heat - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/04/Heat.jpg)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் அக்னி நட்சத்திரத்திற்கு முன்பே வெயில் அதிகமாக கொளுத்தி வருவதால் வெப்பத்தால் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக இரவு நேரங்களில் வெப்பம், புழுக்கம் காரணமாக குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தூங்க முடியாமல் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 7ஆம் தேதி வரை இன்னும் கூடுதலாக வெப்பநிலை உயரக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் வரும் 7-ஆம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் வெப்பநிலை இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் என்றும் கூறியுள்ளார்.
இதனால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்கவேண்டும் என்றும் 12:00 மணி முதல் 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுவை, காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது என்றும், இதனால் அந்தமான் பகுதியில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.