இந்தியா
நாளை பள்ளிகள் திறக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தமிழகத்தைப் போலவே தெலுங்கானாவிலும் நாளை பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் தெலுங்கானா உயர்நீதிமன்றம் பள்ளிகள் திறக்க தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தை போலவே தெலுங்கானா மாநிலத்திலும் குறைந்ததை அடுத்து செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்தது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்த போதிலும் மூன்றாம் அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினர் பள்ளிகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் இது குறித்து பதிவு செய்யப்பட்ட பொதுநல வழக்கு ஒன்று தெலுங்கானா மாநில உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தெலுங்கானா மாநிலத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தனர். இந்த உத்தரவால் தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பதை எதிர்த்து பதிவு செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடந்தது. இந்த விசாரணையின்போது மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயப்படுத்த மாட்டார்கள் என்றும் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் கல்வி தொலைக்காட்சி மூலம் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து இயங்கும் என்றும் தமிழக அரசின் சார்பில் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.