இந்தியா
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர் உயிரிழப்பு..! குடிப்பழக்கம் காரணமா?
![Corona Vaccine Side Effects - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/01/Corona-Vaccine-Side-Effects-1.jpg)
தெலங்கானாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான வழிமுறைகளும், செய்யக்கூடியவை செய்யக்கூடாதவை போன்றவைகளும் அரசு தரப்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. யாரெல்லாம் தடுப்பூசி போடலாம், யார் போடக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தைச் சேர்ந்த சுகாதார பணியாளர் ஒருவர் நேற்று உயிரிழந்தார். 42 வயதாகும் அவர் அங்குள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை சுமார் 11 மணியளவில் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
பின்பு, நேற்று அதிகாலையில் திடீரென அந்த சுகாதார பணியாளருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அருகிலிருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று தகவல்கள் பரவிய நிலையில், அம்மாநில சுகாதார இயக்குநர் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். கொரோனா தடுப்பூசிக்கும் பணியாளர் உயிரிழப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார். குடிப்பழக்கம் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மரணம் ஏற்படுமா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.