இந்தியா
தெலுங்கானா பாஜக தலைவர் அதிரடி கைது: குண்டுக்கட்டாக தூக்கி சென்ற காவல்துறை!
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தெலுங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குண்டுக்கட்டாக தூக்கி செல்லப்பட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு அம்மாநில பாஜகவினர் எதிர்வினையாற்றி வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
தெலுங்கானாவில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. அங்கு நேற்று காலை தேர்வு தொடங்குவதற்கு முன்பே வினாத்தாள் கசிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் பாஜக பிரமுகர் பரம் பிரஷாந்த் என்பவர் தேர்வு மையத்தில் இருந்து வினாத்தாளை புகைப்படம் எடுத்து மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய்க்கு அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து தெலுங்கானா போலீசார் வினாத்தாள் கசிந்தது குறித்து விசாரணை நடத்த பாஜக மாநில தலைவரை கைது செய்ய விரைந்தனர். ஆனால் அங்கு வாக்குவாதம் தொடர்ந்ததால் அவரை குண்டுக்கட்டாக போலீசார் தூக்கிச் சென்று கைது செய்தனர். பாஜக மாநிலத் தலைவரின் கைதுக்கு பாஜக தொண்டர்கள் அங்கு பெரும் எதிர்வினைகளை ஆற்றி வருகின்றனர் இதனால் தெலுங்கானாவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.