உலகம்
லாக்டவுனா அப்படினா? உலகமே அடைக்கப்படும் போது கோமாவிற்கு சென்றவர்.. திறக்கப்படும் போது நினைவுக்கு திரும்பினார்!
நாட்டிங்காம் : இங்கிலாந்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் விபத்து ஏற்பட்டு சரியாக ஒருவருடம் கோமாவில் இருந்து இப்போது தான் மீண்டு வந்துள்ளார். இதனால் கொரோனா வைரஸ் குறித்தோ அல்லது உலகம் முழுவதும் போடப்பட்ட லாக்டவுன் குறித்தோ எதுவும் தெரியவில்லை. இதில் ஆச்சர்யம் கொடுக்க கூடிய விஷயம் என்னவென்றால் இந்த இடைப்பட்ட காலத்தில் அவருக்கு இரண்டு முறை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கண்ணுக்கே தெரியாத ஒரு குட்டி கொடிய வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையும் ஒரு வருடமாக ஆட்டிப்படைத்து வருகிறது. இதுவரை 23 லட்சம் பேரின் உயிரை நேரடியாக வாங்கியிருந்தாலும் அதனால் ஏற்பட்ட பின் விளைவுகள் காரணமாக பல உயிர்கள் போயுள்ளன. கடந்த ஒரு வருடம் என்னவோ அனைவருக்கும் மறக்க கூடியதாகவோ அல்லது எதற்கும் பயனற்ற ஒன்றாகவோ தான் உள்ளது. ஒரு வருடம் முழுவதும் இயக்கமற்ற ஒன்றாக பெரும்பாலானோருக்கு இருந்துள்ளது.
ஆனால் இங்கிலாந்தில் ஒருவருக்கு உண்மையாகவே சரியா இந்த ஒரு வருடம் மட்டும் இயக்கமில்லாமல் போயுள்ளது. உலகமே சரியாக லாக்டவுன் போடப்பட்ட நேரத்தில் கோமாவிற்கு சென்றவர், இப்போது லாக்டவுன் முடிவுக்கு வரும் பொழுது நினைவு திரும்பி வருகிறார்.
உலகம் முழுவதிலும் லாக்டவுன் போடப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இங்கிலாந்தின் பர்டன்-ஆன்-ட்ரெண்ட் நகரை சேர்ந்த இளைஞர் ஜோசப் ஃபிளாவில்க்கு கடந்தாண்டு மார்ச் 1ம் தேதி ஏற்பட்ட விபத்தில் மூளை காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக சுயநினைவை இழந்து கோமாவிற்கு சென்றுள்ளார்.
கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாக அவருடைய குடும்பத்தினரால் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு உடனே செல்ல முடியவில்லை. பெரும்பாலும் வீடியோ கால் மூலமாகவே அவருடன் பேச முயற்சித்துள்ளனர். அவருடைய உறவினர்கள் மட்டுமே உடன் இருந்து கவனித்து வந்துள்ளனர். கிட்ட தட்ட ஒருவருடம் சுயநினைவை இழந்து இருந்த ஃபிளாவில் இப்போது தான் அவருக்கு சற்று நினைவு திரும்பி வருவதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இடைப்பட்ட காலத்தில் அவருக்கு இரண்டு முறை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சமீப காலங்களாக ஜோசப் மீண்டு வருவதற்கான சிறிய அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியுள்ளார், இது மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அவரால் இப்போது நம்முடைய கட்டளைகளை கேட்க முடியும், அதற்கு பதிலளிக்கவும் செய்கிறார் என்று அவருடைய உறவினர்கள் கூறியுள்ளனர். அவரால் புரிந்துகொள்ள முடியும் ஆனால் முழுவதுமாக பதிலளிக்க முடியாது, அதற்கு பதிலாக ஆம் என்றால் ஒரு முறை கண் சிமிட்டுவார், இல்லையென்றால் இரண்டு முறை கண்களை மூடி திறப்பார்.
ஜோசப்க்கு விபத்து ஏற்பட்டதற்கு பின்னர் மட்டும் பிரிட்டனில் சுமார் 40 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 110,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். எல்லாருடைய தலைகீழாக மாறியுள்ளது. இந்த லாக்டவுன் கதைகளை அவர் எப்படி புரிந்துகொள்ள போகிறார் என்பது எங்களுக்கு தெரியவில்லை என அவருடைய உறவினர் ஒருவர் கூறினார். நம்மில் சிலர் இந்த கடினமான காலங்களில் தூங்கி எழுந்ததும் அனைத்தும் சரியாகிவிட்டால் நன்றாக இருந்திருக்கும் என நினைத்திருப்போம் இப்போது ஜோசப்பிற்கு அப்படிதான் இந்த வருடம் மாறியுள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.