தமிழ்நாடு
12-ஆம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த திருமணமான ஆசிரியர்!
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி வட்டம், தருமத்துப்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. சுமார் 1200 மாணவ, மாணவியர் படிக்கும் இந்த பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் காதல் கடிதம் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
12-ஆம் வகுப்பு மாணவிக்கு அந்த பள்ளியின் அறிவியல் ஆசிரியர் காதல் கடிதம் கொடுத்துள்ளார். இதனை படித்து அதிர்ச்சியடைந்த அந்த மாணவி தனது பெற்றோர்களிடம் ஆசிரியர் தனக்கு காதல் கடிதம் கொடுத்தது குறித்து தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாணவியின் உறவினர்கள் பள்ளிக்கு திரண்டு வந்து ஆசிரியர் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.
அந்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை செய்த பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் கல்வி அதிகாரிகள் இந்த கடிதத்தை ஆசிரியர் ராஜா அசோக் குமார் என்பவர் தான் அந்த மாணவிக்கு எழுதினார் என்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து அந்த ஆசிரியரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்தார். காதல் கடிதம் கொடுத்த அந்த ஆசிரியர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் கூறப்படுகிறது.