இந்தியா
நிம்மதியாக வேலை பார்ப்பது டிசிஎஸ் ஊழியர்கள் மட்டும் தான்.. இன்ப அதிர்ச்சி அறிவிப்பு..!
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் உலகில் உள்ள பல முன்னணி நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பொருளாதார மந்தநிலை உள்பட பல்வேறு காரணங்களால் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வருகின்றன. கடந்த ஆண்டு வேலை நீக்க நடவடிக்கை தொடங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு உச்சத்திற்கு சென்றது என்பதும் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் முன்னணி நிறுவனங்களில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
கூகுள், மைக்ரோசாப்ட், ட்விட்டர் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்ததால் அந்த நிறுவனங்களில் பணி செய்து கொண்டிருக்கும் ஊழியர்கள் எந்த நேரத்திலும் நாம் வேலை நீக்கம் செய்யப்படுவோம் என்ற அச்சத்துடனே வேலை செய்து வருகின்றனர். ஆனால் டிசிஎஸ் நிறுவனத்தில் பணி செய்து கொண்டிருக்கும் ஊழியர்கள் மட்டும் நிம்மதியாக வேலை நீக்க பயமின்றி வேலை செய்வதோடு கூடுதல் சம்பளமும் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஆம் டிசிஎஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பள உயர்வை விரைவில் அறிவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாட்டா கன்சல்டன்சி சர்வீஸ் விரைவில் ஊழியர்களின் சம்பள உயர்வை அறிவிக்கும் என அந்நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரித்து மிலிந்த் அவர்கள் தெரிவித்துள்ளார்.
’நாங்கள் எங்கள் ஊழியர்களின் திறமையை நம்புகிறோம் என்றும் பணி நீக்கங்கள் என்பது எங்கள் நிறுவனத்தில் எந்த காரணத்தை முன்னிட்டும் இருக்காது என்றும் அதுமட்டுமின்றி மற்ற நிறுவனங்களில் வேலை இழந்த ஊழியர்களையும் வேலைக்கு அமர்த்த விரும்புகிறோம் என்றும் மிலிந்த் தெரிவித்துள்ளார்.
வேலை நீக்க நடவடிக்கைகளை நாங்கள் நம்புவதில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் திறமையானவர்களை வளர்ப்பதில் நாங்கள் ஈடுபடுகிறோம் என்றும் அவர் தெரிவித்தார். வேலைநீக்க நடவடிக்கை குறித்து அவர் கூறிய போது பல நிறுவனங்கள் தேவைக்கு அதிகமாக ஊழியர்களை வேலைக்கு எடுத்ததால்தான் தற்போது பணி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன என்றும் ஒரு ஊழியரை எடுத்தால் அந்த ஊழியரின் திறமை முழுவதையும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்துவதில் கவனம் செலுத்தினால் வேலைநீக்க நடவடிக்கை என்பது இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு, வடிவமைப்பு, கிளவுட் உள்பட பல அம்சங்களில் எதிர்காலத்தில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அதற்காக திறமையானவர்களை நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம் என்றும் விரைவில் புதிய பணியமர்த்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி எங்களது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட அறிவிப்புகளையும் விரைவில் வெளியிட இருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.
இதனை அடுத்து உலகிலேயே டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிய ஊழியர்கள் தான் வேலை நீக்க பயமின்றி நிம்மதியாக பணி செய்து வருகின்றனர் என கூறப்படுகிறது.