வணிகம்
டாடா நிறுவனம் விரைவில் இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் உற்பத்தியைத் தொடங்கும்: என்.சந்திரசேகரன்
டாடா குழுமம் இந்தியாவில் அடுத்த சில ஆண்டுகளில் செமிகண்டக்டர் சிப் உற்பத்தியைத் தொடங்கும் என அதன் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் வியாழக்கிழமை நிக்கி ஆசியாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து உலகம் முழுவதும் செமிகண்டக்டர் சிப்களுக்கு பெரும் அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் டாடா குழுமம் தலைவர் என்.சந்திரசேகரன் அளித்துள்ள பேட்டியில், எலக்ட்ரிக் வாகனங்கள் உள்ளிட்ட வளர்ந்து வரும் துறைகளில் புதிய தொழில்களைத் தொடங்க டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது.
டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைத் தொடங்கி உள்ளோம். அதன் கீழ் செமிகண்டக்டர் அசம்ப்ளி சோதனை வணிகத்தைத் தொடங்க உள்ளோம். சிப் உற்பத்தியைத் தொடங்க பல்வேறு தரப்பினருடன் இணைந்து செயல்படப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
எலக்ட்ரானிக்ஸ் துறையில் 1 டிரில்லியன் டாலர் சந்தை வாய்ப்பு உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள டாடா குழுமம் ஏற்கனவே அதற்கான வணிகத்தைத் தொடங்கியுள்ளது என சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
டாடா மட்டுமல்லாமல் அதானி குழுமம், வேதாந்தா குழுமம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்யும் நிறுவனங்களைத் தொடங்கும் முயற்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.