வணிகம்
ஏர் ஏசியாவை வாங்கும் ஏர் இந்தியா?
ஏர் ஏசியா நிறுவனத்தை டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் வாங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய விமான போக்குவரத்து நிறுவனம் ஏர் இந்தியா, டாடா குழும் வசம் வந்ததை அடுத்து ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தை வாங்கி அதனை தங்களுடன் இணைக்கத் திட்டமிட்டு வருகிறது.
ஏர் ஏசியா நிறுவனத்தில் டாடா குழுமத்துக்கு ஏற்கனவே 84 சதவீத பங்குகள் உள்ளன. மீதம் உள்ள 16 சதவீத பங்குகள் மலேசியாவின் ஏர் ஏசியா நிறுவனத்திடம் உள்ளது.
அதுமட்டுமல்லாமல் டாடா நிறுவனத்துக்கு விஸ்தரா நிறுவனத்திலும் 51 சதவீத பங்குகள் உள்ளன. இந்நிலையில் இந்த வர்த்தகங்களை ஒன்றாக்கும் விதமாக டாடா நிறுவனம் முதற்கட்டமாக ஏர் இந்தியா நிறுவனத்துடன் ஏர் ஏசியா நிறுவனத்தை இணைக்க முடிவு செய்துள்ளது.
ஏர் ஏசியா நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகள் டாடா குழுமத்திடம் உள்ளதால், ஏர் இந்தியா நிறுவனத்துடன் ஏர் ஏசியா நிறுவனம் விரைவில் இணையும் என கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக இரு நிறுவனங்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
ஏர் ஏசியா இந்தியா நிறுவனம் குறைந்த விலையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானச் சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் ஏர் இந்தியாவுடன் இணைந்தால் ஏர் இந்தியாவின் விமான கட்டணங்களும் கணிசமாகக் குறைந்து சேவை மேலும் சிறப்பாகும் என துறை சார்ந்த வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.