தமிழ்நாடு
முதல்வர் முக ஸ்டாலின் – டாடா சந்திரசேகரன் சந்திப்பு.. தமிழகத்தில் முதலீடு செய்ய திட்டமா?
தமிழக முதல்வர் ம க ஸ்டாலின் அவர்களை டாடா குழுமத்தின் தலைவர் என் சந்திரசேகர் அவர்கள் சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்றான டாடா கடந்த சில வருடங்களாக பல்வேறு மாநிலங்களில் கோடிக்கணக்கில் முதலீடு செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் டாடா குழுமத்தின் தலைவராக இருக்கும் என் சந்திரசேகர் நேற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை அவருடைய இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு உதயநிதி ஸ்டாலின் உள்பட பலர் இருந்தனர்.
முதல்வர் மற்றும் டாடா குழும தலைவர் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. டாடா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மாநிலங்களில் முதலீடு செய்து வரும் நிலையில் தமிழகத்தில் முதலீடு செய்யவும், தமிழக தொழில் துறையில் முன்னேற்றம் காண நடவடிக்கை எடுக்கவும் இந்த சந்திப்பின்போது ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
டாடா குழுமத்தின் தலைவர் திரு. என்.சந்திரசேகரன் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சந்தித்துப் பேசினார். pic.twitter.com/UJz0vlultQ
— CMOTamilNadu (@CMOTamilnadu) January 1, 2023
டாடா நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்யும் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தமிழகத்தில் தொடங்கும் தொழில்களுக்கு முழு அளவில் தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் கூறப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகம் முழுவதும் பெரிய நிறுவனங்களே வேலை வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் சமீபத்தில் டாடா நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 20 சதவீத சம்பள உயர்வு அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி டாடா நிறுவனம் பல ஊழியர்களை வேலைக்கு எடுத்து வரும் நிலையில் தற்போது தமிழக முதல்வருடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து இன்னும் வேலை வாய்ப்புகள் அதிகம் தமிழகத்திற்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தமிழக பட்ஜெட்டில் தமிழகத்தில் தொழில் தொடங்க வரும் நிறுவனங்களுக்கு அதிகமான சலுகைகள் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுவதால் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி இன்னும் மேலோங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.