தமிழ்நாடு
ரூ.1000 கோடியை நெருங்கியது 2 நாள் டாஸ்மாக் விற்பனை!
தமிழகத்தில் இன்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து நேற்றும் நேற்று முன்தினமும் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் இரண்டு வாரங்களுக்கு தேவையான அளவு வாங்கி வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் காய்கறி கடைகள், மளிகை கடைகள் மற்றும் மருந்து கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் 12 மணி வரை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக 14 நாட்கள் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இதனை அடுத்து நேற்றும் நேற்று முன்தினமும் மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை பயன்படுத்தி குடிமகன்கள் மது வகைகளை வாங்கி குவித்தனர். ஒவ்வொருவரும் ஒரு பெரிய பைகள் நிறைய மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. பெரும்பாலான மதுப்பிரியர்கள் 2 வாரங்களுக்கும் சேர்த்து மொத்தமாக மது வகைகளை வாங்கி குவித்துள்ளனர்
ஊரடங்கு காரணமாக இன்று முதல் 14 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடி இருக்கும் என்பதால் மொத்த மொத்தமாக மது பிரியர்கள் மதுக்களை வாங்கிச் சென்றுள்ளனர். கொரோனா காலத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி முக்கியம் என்ற அளவில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மது வகைகளை அருந்தக்கூடாது என மருத்துவர்கள் ஒருபக்கம் அறிவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அரசு மதுக்கடைகளை மாலை 6 மணி வரை திறந்து கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய்க்கு இரண்டு நாட்களில் மது விற்பனை செய்துள்ளது முரண்பாட்டின் மொத்த உருவமாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.