தமிழ்நாடு
தஞ்சை அதிமுக வேட்பாளருக்கு கொரோனா உறுதி: மருத்துவமனையில் அனுமதி!
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர்களும், தமிழகத்தில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர்களும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் கொரோனா வைரசால் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், முதலமைச்சர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவ்வப்போது வெளிவந்த தகவலை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் ஒருசில வேட்பாளர்களுக்கும் கொரோனா பரவியுள்ளது. இந்த நிலையில் தற்போது தஞ்சை தொகுதி அதிமுக வேட்பாளர் அறிவுடைநம்பி என்பவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே துரைமுருகன், அண்ணாமலை உள்பட ஒருசில வேட்பாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒருவருக்கு கொரோனா பரவியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.