தமிழ்நாடு
நாடு முழுவதும் மோடி அலை, தமிழகத்தில் மட்டும் எதிர்ப்பு அலை: ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி இருந்த ரஜினிகாந்த் தேர்தல் வெற்றிக்காக பிரதமர் மோடிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி கூறினார். இந்நிலையில் போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினி.
அப்போது, இந்தியாவில் தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைத் தவிர நாடு முழுவதும் மோடி ஆதரவு அலை வீசியிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் மோடி எதிர்ப்பு அலை வீசியிருக்கிறது. தேசிய அளவில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய் போன்ற தலைவர்களுக்குப் பின்னர் மக்களை ஈர்க்கும் கரிஷ்மா மிக்க தலைவராக மோடி விளங்குகிறார்.
தமிழகத்தில் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் , கலைஞர், ஜெயலலிதா போன்றோருக்கு அந்த கரிஷ்மா இருந்தது. இப்போது தேசிய அளவில் மோடிதான் ஈர்ப்பு மிக்க தலைவராக விளங்குகிறார் என்றர் ரஜினி. இதனையடுத்து செய்தியாளர்கள் தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை ஏன் வீசியது என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த ரஜினி, தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நீட் போன்ற பிரச்சினைகளோடு எதிர்க்கட்சியினரின் சூறாவளி பிரச்சாரமே மோடி எதிர்ப்பு அலையை உருவாக்கியது. அரசியலில் ஒரு அலை என்று உருவாகிவிட்டால் அதில் இருந்து யாரும் தப்ப முடியாது என்றார்.