தமிழ்நாடு
முத்தூட் பைனான்ஸில் 25 கிலோ தங்கம் கொள்ளை – 6 பேர் கைது
ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் 25 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று காலை ஊழியர்கள் வழக்கம் போல் தங்கள் பணியைத் தொடங்க தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது 9.30 மணியளவில் திடீரென அலுவலகத்தில் முகமூடி கொள்ளையர்கள் கையில் துப்பாக்கிகளுடன் வந்தனர்.
நொடிப்பொழுதில் அலுவலக மேலாளர், பணியாளர்களை தாக்கி அனைவரையும் கட்டி வைத்தனர். உயிருக்கு பயந்து எவரும் வாய் திறக்கவில்லை. இதனையடுத்து அங்கிருந்து 25 கிலோ தங்க நகைகள், 96 ஆயிரம் ரூபாய் ரொக்கம் எல்லாவற்றையும் எடுத்தனர். மேலும், அந்த நேரத்தில் பணம் எடுக்க, போட வந்தவர்களையும் கட்டி வைத்து, அவர்களிடம் இருந்து பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கொள்ளையர்கள் எடுத்துச் சென்ற பையில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஜிபிஎஸ் மற்றும் செல்போன் நம்பர் மூலம் கர்நாடக மாநிலம் விரைந்து சென்ற போலீசார், 6 பேரை அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.