தமிழ்நாடு
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை! 2 நாட்களுக்கு நீடிக்கும்!!
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகிறது. இந்த மழை அடுத்த 2 நாட்களுக்கும் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. கனமழை பெய்து ஓய்ந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
மேலும், இலங்கைக்கு கிழக்கே, தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் மற்ற உள்மாவட்டங்களில் மிதமான மழையும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று (டிசம்பர் 17) காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் காலை முதலே மக்கள் வெளியே வரமுடியாமல் வீட்டிற்குள்ளையே முடங்கி இருக்கின்றனர். மேற்கண்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.