தமிழ்நாடு
தமிழக பட்ஜெட்: மாடுகளை பாதுகாக்க இத்தனை கோடியா?
சென்னை: அழிந்து வரும் மாட்டினங்களை காப்பதற்காக தமிழகத்தில் முதல்முறையாக கலப்பின காளைகளை கொண்டு உறை விந்து நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மிக முக்கியமான கட்டத்தில் தமிழக சட்டசபையில் இன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றது. அதன்படி, தமிழறிஞர்களுக்கு ஓய்வூதியம், தமிழ் அறிஞர்களின் படைப்புகளுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ரூ. 2 ஆயிரம் கோடியில் உணவு பதப்படுத்தும் பூங்காவை தமிழகத்தில் அமைக்க உள்ளது.
ரூ.100 கோடி திட்ட மதிப்பீட்டில் உறைவிந்து உற்பத்தி நிலையம் அமைக்கப்படும். மரபுத்திறன் மிக்க நாட்டின, கலப்பின காளைகளை கொண்டு உறை விந்து நிலையம் அமைக்கப்படும்.
இது அழிந்துவரும் மாட்டினங்களை மீண்டும் அதிகமாக்க வழி செய்யும். வீரியம் மிக்க காளை மாடுகளை உற்பத்தி செய்ய அதிரடி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது, என்று நிதியமைச்சர் அறிவித்து இருக்கிறார்.