தமிழ்நாடு
இந்திய ஒன்றியம் என கூறியது ஏன்: கவர்னர் தமிழிசை விளக்கம்!
இந்திய ஒன்றியம் என கூறியது ஏன் என புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் புதுவை மாநிலத்தில் அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்ட போது இந்திய ஒன்றியம் எனக்கூறி பதவி ஏற்றுக்கொண்டனர். தமிழகத்தில் உள்ள தமிழக அரசியல் தலைவர்கள் ஒன்றியம் என்ற கூறியதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அண்டை மாநிலமான புதுச்சேரியில் இந்திய ஒன்றியம் என்று கூறி பாஜக அமைச்சர்களே பதவியேற்றுக் கொண்டது முரண்பாட்டின் மொத்த உருவமாக இருப்பதாக விமர்சனம் செய்யப்பட்டது. இதுகுறித்து நேற்று தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அவர்களிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் சரியான பதிலை கூறவில்லை என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இது குறித்து புதுவை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். புதிய அமைச்சர்கள் பதவி ஏற்கும் போது இந்திய ஒன்றியம் என்று கூறியது பற்றி தமிழிசை கூறியபோது, ‘இந்தியன் யூனியன் டெரிட்டரி என்பது இந்திய ஒன்றிய ஆட்சிப் பரப்பு என்று புதுவை அரசின் மரபாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. புதுவை அரசின் மரபின்படி தமிழ் உறுதிமொழி படிவத்தில் எந்த மாறுதலும் இன்றி பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது என்று அவர் கூறினார். மேலும் இந்திய யூனியன் டெரிட்டரி ஆஃப் புதுச்சேரி என்பது இந்திய ஒன்றிய புதுச்சேரி ஆட்சிப் பரப்பு என தமிழர்களால் மொழி பெயர்க்கப்பட்டது என்றும், யூனியன் டெரிட்டரி என்பது யூனியன் பிரதேசமாக புதுச்சேரியை தான் குறிக்கும் என்றும் எங்கேயும் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறவில்லை என்று புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை மறுப்பு தெரிவித்தார்.