தமிழ்நாடு
முன்னேறிய வகுப்பினருக்கு குறைந்த கட் ஆஃப்: தமிழிசையின் விளக்கம்!
![Tamilisai - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/07/Tamilisai.jpg)
ஸ்டேட் பேங்க் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதில் எஸ்.சி, ஓ.பி.சி மற்றும் பொதுப் பிரிவினருக்கான கட் ஆப் 61.25 ஆகவும், எஸ்.டி பிரிவினருக்கான கட் ஆப் 53.25 ஆகவும், 10 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் EWS பிரிவினருக்கு மற்ற பிரிவினரை விட கட்-ஆப் மதிப்பெண் மிகவும் குறைவாக 28.5 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தமிழகத்தில் கடுமையான கண்டனங்கள் எழுந்தன. பாஜக அரசு சமூகநீதியை படுகுழியில் தள்ளியிருக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையான கண்டனம் தெரிவித்து எதிர்வினையாற்றியுள்ளார். இந்நிலையில் இந்த கட் ஆஃப் மதிப்பெண் தொடர்பான சர்ச்சைக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, வறுமையினால் வாடும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு அளித்தது சமூக நீதிக்கு எதிரானது போலவும், பாஜகவுக்கு சமூக நீதி குறித்து அக்கறையில்லை என்பது போலவும் ஒரு தோற்றத்தை தமிழக மக்கள் மத்தியில் ஏற்படுத்த முயல்கிறார் ஸ்டாலின். இது மிகத்தவறான ஒன்று. இடஒதுக்கீட்டை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் வேண்டுமென்றே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் ஸ்டாலின் இத்தகைய பதிவை இடுகையிட்டுள்ளார். அவர் பொய் சொல்லியே அரசியல் நடத்துகிறார்.
10 சதவிகித இடஒதுக்கீடு அரசாணை பிறப்பிக்கப்பட்ட பிறகு வரும் முதல் தேர்வு இது. இதில் பயன்பெறுபவர்கள் முறையான சான்றிதழை அளிக்க முடியாத காரணத்தால் குறைந்த அளவிலேயே தங்களது வேலைவாய்ப்பிற்காக பதிவிட்டுள்ளனர். இதனால் போட்டி குறைவாக இருந்த காரணத்தால் கட் ஆப் குறைவாக அளிக்கப்பட்டுள்ளது. எந்த அளவு போட்டி இருக்கிறதோ அந்த அளவுக்கு கட் ஆப் இருக்கும் என்று கூறியுள்ளார்.