செய்திகள்
பெட்ரோல் விலை உயர்வு: ப.சிதம்பரத்துக்கு டுவிட்டரில் பதிலடி கொடுத்த தமிழிசை!
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று நாடுதழுவிய போராட்டங்கள் நடைபெற்றது. போக்குவரத்து முடக்கம், கடையடைப்பு என போராட்டம் வலுவாக நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்த இந்த பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தது.
ஆனால் இந்த விலை உயர்வுக்கு பாஜக அரசு பொறுப்பில்லை என கூறப்பட்டது. இதனையடுத்து இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசு பொறுப்பில்லை என்று பாஜக கூறுவது இந்த ஆண்டின் மிகப் பெரிய நகைச்சுவை என்றார். மேலும் பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு விதித்துள்ள கொடுமையான வரிகள்தான் விலை உயர்வுக்குக் காரணம் என்பதைச் சிறு பிள்ளைகள் கூட அறிவார்கள் என்றார் ப.சிதம்பரம்.
இதனையடுத்து ப.சிதம்பரத்தின் இந்த கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை பதிலடி கொடுத்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தியப் பொருளாதார வளர்ச்சி என உலக வங்கி முதல் பன்னாட்டு நிதி ஆய்வறிக்கைகள் வரை சொல்லியும் ப.சி தவறான விவரம் என்கிறார். பொருளாதாரம் இங்கு சீர்குலையவில்லையே என்ற ஏமாற்றமா? பொருளாதார நிபுணர் மன்மோகன் காலத்தைவிடப் பொருளாதாரம் நிலையாகவே உள்ளது என தெரிவித்தார்.