தமிழ்நாடு
உலகக் கோப்பை போட்டியில் எதிரொலித்த தமிழ் வாழ்க, தந்தை பெரியார் வாழ்க!
நேற்று முன்தினம் இங்கிலாந்தில் நடைபெற்ற இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் ரசிகர் ஒருவர் தமிழ் வாழ்க, தந்தை பெரியார் வாழ்க என்ற பதாகையுடன் மைதானத்தில் நின்றது கவனத்தை ஈர்த்துள்ளது.
சமீபத்தில் இந்திய நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் பதவியேற்கும் போது தமிழ் வாழ்க, தந்தை பெரியார் வாழ்க போன்ற கோஷங்களை எழுப்பி பதவி பிரமாணம் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக எம்பிக்கள் பதவியேற்கும் போது பாஜகவினர் ஜெய் ஸ்ரீராம் போன்ற முழக்கங்களை எழுப்பினர். இது ஊடகங்களில் பெரிதாக பேசப்பட்டது. குறிப்பாக சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டது.
இந்நிலையில் இந்தியா, இங்கிலாந்து விளையாட்டை பார்க்க சென்ற ரசிகர் ஒருவர், தமிழ் வாழ்க, தந்தை பெரியார் வாழ்க என்ற பதாகையுடன் நின்றார். தேசியக் கொடியை போர்த்தியிருந்த அவர், கையில் திராவிடர் கழகத்தின் கொடியை வைத்திருந்தார். சிலர் தமிழ் வாழ்க, தந்தை பெரியார் வாழ்க என முழக்கத்தையும் எழுப்பினர். அந்த பதாகை வைத்திருந்தவரின் புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.