தமிழ்நாடு
6 நாட்களாக நடைபெற்ற ஆசிரியர்கள் போராட்டம் திடீர் வாபஸ்.. இதுதான் காரணம்!
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 6 நாட்களாக சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்தோடு உண்ணாவிரதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த நிலையில் நேற்று திடீரென உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
கடந்த 6 நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தோடு சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தனர் என்பதும் நான்காவது நாளில் சுமார் 80 பேர் வரை மயக்கமடைந்து அதில் சுமார் 10 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் போராட்டம் செய்யும் ஆசிரியர்கள் குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பதும் இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து போராட்டம் தொடரும் என்றும் முதல்வர் இந்த பிரச்சனையில் தலையிடும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியதோடு இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பை அடுத்து தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக போராட்டம் செய்த ஆசிரியர்கள் குழு தெரிவித்துள்ளனர்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற தங்களது கோரிக்கை குறித்து ஆய்வு செய்து தாயுள்ளத்துடன் குழு அமைத்த தமிழக முதல்வருக்கு தங்களது நன்றி என்றும் போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கும் முறை குறித்து ஆய்வு செய்ய இன்னும் ஓரிரு நாளில் தமிழக அரசு குழு அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.