தமிழ்நாடு
சென்னை மக்களே உஷார்: கொட்டப்போகுது கனமழை என தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
சென்னையில் தற்போது பெய்து வரும் மழை எல்லாம் ஒன்றுமே இல்லை என்றும் இனி வரும் நாட்களில் பெய்யப்போகும் மழைதான் மிக கனமழை என்றும் எனவே சென்னை மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக உருவெடுத்து வடக்கு கடலோர மாவட்டங்களை அந்த தாழ்வு மண்டலம் நெருங்கும் என்றும் இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தில் தீவிர கனமழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் அதி தீவிர கனமழை பெய்து கொண்டிருப்பதாகவும் வங்கக்கடலில் உருவாகியுள்ள தாழ்வு நிலை விரைவில் கடல் பகுதிகளுக்கு அருகே வரும் என்றும் வெதர்மேன் தெரிவித்துள்ளார். காற்றழுத்த தாழ்வு பகுதியில் அதிக அளவு மேகக்கூட்டங்கள் இருப்பதாகவும் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகமாக இருப்பதாகவும் காற்றின் குறுக்குவெட்டு வேகம் குறைவாக இருப்பதால் தற்போது இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருவெடுத்து வடக்கு கடலோர மாவட்டங்களை 11ஆம் தேதி அதிகாலை அடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தாழ்வு மண்டலத்தின் மேற்கு பகுதிகளில் அதிக அளவில் மேக கூட்டம் இருப்பதால் தமிழக கடற்கரை பகுதிகளில் தாழ்வு மண்டலம் நெருங்க நெருங்க மழை அதிகமாகி அதன் பின் படிப்படியாக குறையும் என்றும் கடலூர் முதல் சென்னை வரை 11 ஆம் தேதி பிற்பகல் வரை கனமழை பெய்யும் என்றும் வடக்கு மட்டும் உள் மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதிக கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் 11ஆம் தேதி வரை மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.