தமிழ்நாடு
5 விதமான சுற்றுலா திட்டங்கள்: தமிழக அரசின் சுற்றுலாத் துறை அழைப்பு!
தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுற்றுலா தலங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது என்பதும் தற்போது சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்து சென்று வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக தமிழக அரசின் சுற்றுலாத்துறை ஐந்து விதமான சுற்றுலா திட்டங்களை அறிவித்து சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. சென்னை – மாமல்லபுரம் & காஞ்சிபுரம்- மாமல்லபுரம் ஒரு நாள் சுற்றுலா, நவகிரக சுற்றுலா 3 நாட்கள், அறுபடை வீடு சுற்றுலா 4 நாட்கள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா 8 நாட்கள் ஆகிய சுற்றுலாக்களுக்கு முன்பதிவு செய்ய சுற்றுலாத் துறை அழைப்பு விடுத்துள்ளது.
இந்த சுற்றுலாவுக்கு செல்ல விரும்புபவர்கள் சுற்றுலாத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.ttdconline.com என்ற இணையதளத்தின் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறையே சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் தற்போது தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பி விட்டதாகவே கருதப்படுகிறது.