செய்திகள்
சேலத்தில் 2 மாணவர்களுக்கு கொரோனா! பள்ளிகள் மீண்டும் மூடல்?
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் சேலத்தில் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள் மீண்டும் மூட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கொரோனா பரவலால் மூடப்பட்ட பள்ளிகள், 9 மாதங்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் திறக்கப்பட்டன. 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தற்போது வகுப்புகள் நடைபெறுகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தூய்மைப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை, வெப்பநிலை அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பிறகே வகுப்புகளுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், சேலத்தில் வெவ்வேறு பகுதிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வாழப்பாடி அருகே உள்ள பெரிய கிருஷ்ணாபுரம் அரசு மாதிரிப்பள்ளியில் ஒரு மாணவிக்கும், தும்பம் ஊராட்சியில் 10 வது படிக்கும் மாணவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளிகளை திங்கட்கிழமை வரையில் மூடும்படி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா உறுதியாகியுள்ளதால், மற்ற மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுனர். அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது.