தமிழ்நாடு
இன்று முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடக்கம்!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களுக்காக மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். இதற்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். ஆனால், இந்தாண்டு கொரோனா பரவல் இருப்பதால் சிறப்பு பேருந்துகள் எதிர்பார்த்த அளவில் இயக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது.
இப்படியான சூழலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு 4 ஆயிரம் சிறப்பு பேருந்துகளும், மற்ற இடங்களில் 6 ஆயிரம் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, சிறப்பு பேருந்துக்கான முன்பதிவு மையங்களும் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டன. முன்பதிவு செய்வதற்காக கோயம்பேட்டில் 10 மையங்களும், தாம்பரம் சானிடோரித்தில் 2 மையங்களும், பூந்தமல்லியில் ஒரு மையம் என மொத்தம் 13 முன்பதிவு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் அது குறித்த புகார்களுக்கு 1800 425 6151 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். இதே போல் பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு பேருந்துநிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.