தமிழ்நாடு
மஃப்டியில் வந்த டெல்லி போலீசாரை விசாரணைக்கு அழைத்து வந்த தமிழக போலீஸாரால் பரபரப்பு!
தமிழகத்தில் டெல்லி போலீசார் மஃப்டியில் வந்த நிலையில் அவர்களை டெல்லி போலீஸ் என தெரியாமல் தமிழக போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் போலி விசா மூலம் மணிகண்டன் என்பவர் பிடிபட்டார். இதனையடுத்து அவரை விசாரணை செய்த டெல்லி போலீசார் அவருக்கு விசா எடுத்துக் கொடுத்தது கீழக்கரையைச் சேர்ந்த பக்ருதீன் என்பவர் என தெரியவந்தது.
இதனை அடுத்து டெல்லி போலீசார் மஃப்டியில் கீழக்கரை வந்து பக்ரூதினை விசாரணை செய்தனர். ஆனால் பக்ரூனை விசாரணை செய்வதற்கு பதிலாக வேறொருவரிடம் அவர்கள் விசாரணை செய்ததால் சந்தேகம் அடைந்த அந்த பகுதி இளைஞர்கள் டெல்லி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த கீழக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று டெல்லி போலீசார் இருவரையும் அவர்களிடம் வாக்குவாதம் செய்த மூன்று இளைஞர்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணை செய்தபோது அதில் இருவர் டெல்லி போலீசார் என தெரியவந்தது.
இதனை அடுத்து அவர்கள் தேடி வந்த பக்ரூதின் வீட்டிற்கு சென்றபோது அந்த வீடு பூட்டி இருந்தது. அந்த வீட்டின் கதவில் நோட்டீசை ஒட்டிவிட்டு போலீசார் திரும்பினார்கள். டெல்லி போலீசார் உள்ளூர் போலீசாரை தொடர்பு கொள்ளாமல் நேரடியாக மஃப்டியில் சென்றதால் தான் இந்த குழப்பம் ஏற்பட்டது என்றும் உள்ளூர் போலீசாருடன் தொடர்பு கொண்டு சென்றிருந்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்றும் கீழக்கரை போலீசார் தெரிவித்துள்ளனர்.