தமிழ்நாடு
தமிழகத்தில் 1.35 லட்சம் ரேசன் கார்டு விண்ணப்பங்கள் நிராகரிப்பு: உணவு வழங்கல் துறை தகவல்
ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதால் ரேஷன் அட்டை வேண்டி விண்ணப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை தமிழகத்தில் ஏழு லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் புதிய ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பம் செய்து இருப்பதாக உணவு வழங்கல் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் 7,19,895 நபர்கள் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு கோரி விண்ணப்பம் செய்திருப்பதாகவும், அதில், 4,52,188 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், 1,35,730 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளிவந்துள்ளது. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் போக மீதமுள்ள 3,38,512 விண்ணப்பங்களுக்கு புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளதாகவும், 1,13,676 ஸ்மார்ட் கார்டு அச்சிடும் பணி நடைப்பெற்று வருவதாகவும் உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை அதிகபட்சமாக, தென் சென்னையில் கடந்த 3 மாதங்களில் 49920 நபர்கள் விண்ணப்பம் செய்ததாகவும், அதில் 17728 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளதாகவும், 6073 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வட சென்னையில், 41431 நபர்கள் விண்ணப்பம் செய்ததாகவும், அதில்16608 விண்ணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 5312 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த 3 மாதங்களில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 43,647 நபர்களும், சேலம் மாவட்டத்தில் 38,295 நபர்களும் புதிய ரேசன் கார்டுகளுக்கு விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.