இந்தியா
இந்தியா 55 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர இந்த 5 மாநிலங்களிலும் 10% வளர்ச்சி அவசியம்: IMF
![IMF - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/10/IIMF.jpg)
சென்னை: இந்தியா 2047-ஆம் ஆண்டுக்குள் 55 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர வேண்டுமெனில், தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மூன்று தொழில் வளர்ந்த மாநிலங்களின் பொருளாதாரம் ஆண்டுக்கு 10 சதவிகிதம் வளர வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் செயல் இயக்குனரும், முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகருமான திரு. கிருஷ்ணமூர்த்தி வி. சுப்ரமணியன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
தொழில்துறை கூட்டமைப்பு (CII) ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “ஜப்பானின் பொருளாதாரம் 1970-ல் 215 பில்லியன் டாலராக இருந்தது. அது 1995-ல் 5.1 டிரில்லியன் டாலராக உயர்ந்தது. இது 25 மடங்கு வளர்ச்சி. அதேபோல் இந்தியாவும் தற்போதைய 7 சதவிகித வளர்ச்சியை 8 சதவிகிதமாக உயர்த்தினால் 55 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர முடியும்” என்றார்.
நடுத்தர வருமான நாடுகள் பொறிக்குள் சிக்குவதால் வளர்ச்சி குறையும் அபாயம் இருப்பதாகவும், இதற்கு தீர்வு காண வேண்டிய அவசியம் இருப்பதாகவும் சுப்ரமணியன் தெரிவித்தார்.
“தயாரிப்புத் துறை மற்றும் உலகளாவிய மதிப்புச் சங்கிலியில் இணைவது மிகவும் முக்கியமானது. கூட்டாட்சி அரசில் அதிகாரம் இருக்கும். ஆனால் அதிகாரத்துடன் பொறுப்பும் இருக்க வேண்டும். அதிகாரம் மட்டுமே பேசி பொறுப்பை ஏற்காமல் இருக்க முடியாது. நடுத்தர வருமான நாடுகளின் பொறிக்குள் சிக்குவதைத் தவிர்க்க தயாரிப்புத் துறை வளர்ச்சி மிகவும் முக்கியம். தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத் போன்ற தயாரிப்புத் துறை சக்திகளாக விளங்கும் மாநிலங்கள் இதில் முன்னணியில் இருக்க வேண்டும்” என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப்ரமணியன், மாநில அரசுகள் உலகளாவிய முதலீடுகளை ஈர்க்க அதிக சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றார். நிலங்களை ஒரே இடத்தில் தொகுத்து வைப்பது மற்றும் தொழிற்சாலைகளை விரைவாக அமைப்பதற்கான அனுமதிகளை விரைவுபடுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
“மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க என்னென்ன கொள்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? நிலம், தொழிலாளர், தளவாடம் மற்றும் மின்சாரம் ஆகியவை தயாரிப்புத் துறைக்கு அவசியமானவை. பல நிறுவனங்கள் சீனாவுக்கு மாற்றாக இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க தயாராக உள்ளன. மேலும் இந்தியா பெரிய சந்தையாகும். சீனா அனைத்து அனுமதிகளையும் வழங்குகிறது. ஆனால் இந்தியாவில் பல அனுமதிகளைப் பெற நிறுவனங்கள் தலைவலிப்பதாக தெரிவிக்கின்றன. இது முக்கியமாக மாநில அரசுகளின் பொறுப்பு. தொழிலாளர், சுற்றுச்சூழல் உள்ளிட்ட அனைத்து அனுமதிகளையும் வழங்கும் ஒற்றைச் சாளர அமைப்பு தேவை” என்றார்.